வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் நேற்று காலை பெருமாள் கோயிலுக்கு திரும்பினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயில் 118 வது வைகாசி வசந்த உற்ஸவ விழா நடக்கிறது. ஜூன் 11 காலை வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கிய பெருமாள் தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நகர் வலம் வந்தார்.

பின்னர் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், தினமும் இரவு அவதார காட்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னர் பூப்பல்லக்கில் அமர்ந்த பெருமாள் இரவு 10:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து கரையேறினார். விடிய விடிய நகர் உலா வந்த பெருமாள் நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கோயிலை அடைந்தார். இரவு கண்ணாடி சேவை நடந்தது.

இன்று காலை உற்ஸவ சாந்தி விழாவையொட்டி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நாளை கருட வாகன சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement