கோவில்களில் தெப்ப உற்சவம் நடத்த... ஆர்வம்; சிதம்பரத்தில் பக்தர்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியின் முயற்சியால், குளங்கள் சீரமைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு, தெப்ப உற்சவம் நடத்தி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பண்டைய கால மன்னர்கள் கோவில் இருக்கும் இடத்தில் குளங்களை அமைத்தனர். அந்த வகையில், நீர் நிலைகளை, பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், குளங்களை துாய்மைப்படுத்தி ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திருவிழாக்கள் நடத்தி, தெப்ப உற்சவத்தை நடத்தி வந்தனர்.

இதன் காரணமாகவே, நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, ஏரி, குளங்கள் படிப்படியாக துார்க்கப்பட்டு, மனைகளாகவும், விளை நிலங்களாகவும் மாறி காணாமல் போனது.

இந்நிலையில், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட குளங்களை மீட்டெடுத்து, செப்பனிட நகராட்சி அதிகாரிகள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து, சிதம்பரத்தில் துார்ந்துபோய் இருந்த குளங்கள் அனைத்தும் துார் வாரி செப்பனிடும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

குறிப்பாக, ஒவ்வொரு குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம் சீரமைப்பில் கவனம் செலுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பெரியண்ணா குளம், ஞானபிரகாச குளம், குமரன் குளம், பாலமான் குளம், காரைக்குட்டை, தச்சன்குளம் ஆகிய குளங்கள் துார் வாரி, மின்விளக்குடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆயிகுளம் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. ஓமக்குளம், நாகசேரி குளங்கள் துார்வாரும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. சிதம்பரம் நுழைவு வாயிலில் உள்ள பெரியண்ணா குளம் சீரமைத்து மக்கன் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

குளங்கள் சீரமைப்பு பணியால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சிதம்பரம் கனகபை நகரில் அமைந்துள்ள ஞானபிகாசம் குளம் துார்வாரப்பட்டதால், 34 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட, சிதம்பரம் நடராஜர் கோவிலின் தெப்பல் உற்சவம் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்தது.

சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு ரேணுகா பரிமேஸ்வரி கோவில் தெப்பல் உற்சவத்தை, அருகில் உள்ள பெரியண்ணா குளத்தில், முதல் முதலாக கோவில் நிர்வாகம் நடத்தியது. சிதம்பரம் பகுதியில் குளங்கள் துார்வாரப்படுவதால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement