காவல் ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்: சீமான் கேள்வி

சென்னை:காவல் ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன் என்றும், தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சீமான் அறிக்கை:
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் நிலை உயர்த்துதல் தொடர்பான தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின் படி, 2002ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டுவரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
2021 சட்டமன்றத்தேர்தலின் போது காவல்துறையினருக்கான பதவி உயர்வு காலவரம்பு குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்ததால் தமிழ்நாடு காவல்துறையினர் மிகுந்த ஏமாற்றத்திலும், வேதனையிலும் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ஆட்சி முடிவுறும் தருவாயில் காவல்துறையினரின் அதிருப்தியைச் சமாளிக்கும் விதமாக, விருப்பமின்றியும், வேறுவழியின்றியும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது காவலர்கள் நிலை உயர்வுக்கான காலவரம்பினைக் குறைப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலராகவும், அதன்பின் அடுத்த 3 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்த பிறகு ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகள் ஏட்டாகப் பணிபுரிந்த பிறகு சிறப்பு காவல் ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்பதை மாற்றி, 23 ஆண்டுகளாகக் (2 ஆண்டுகள்) குறைத்துள்ளது.
ஆனால், பதவி உயர்வு கால வரம்பானது 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று திமுக அரசு அவ்வரசாணையில் தெரிவித்துள்ளதால், 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்குப் பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது என்பது திமுக அரசு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
திமுக அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் வரிசையில் தற்போது காவலர்களுக்கான பதவி உயர்வு காலவரம்பு குறைப்பு வாக்குறுதியும் இணைந்துள்ளது.
ஏற்கனவே 2011க்கு முன்பு பணியில் சேர்ந்து, 5 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்துவிட்ட காவலர்களுக்கு, தமிழ்நாடு அரசு வழங்கும் 2 ஆண்டு காலவரம்பு குறைப்பு சலுகையை ஏட்டாகப் பணிபுரியும் காலத்தில் வழங்கலாமே? உண்மையிலேயே திமுக அரசிற்கு காவலர்களுக்கு பதவி உயர்வில் கால வரம்பு சலுகை வழங்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் காவலராகப் பணியில் சேர்ந்து தற்போது 23 ஆண்டுகள் பணி புரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்குவதே முறையானதும், சரியானதுமாகும்.
ஆகவே, இரவு பகல் பாராது, கடும் மழை, கொடும் வெயில் பாராது அர்ப்பணிப்புணர்வுடன் 23 ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்துள்ள காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதன்படி, தமிழ்நாடு அரசு 2011க்குப் பிறகு என்ற கட்டுப்பாடு விதித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற்று, புதிய அரசாணையை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
* எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் : மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்
-
பழங்குடியின மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து மாயம்
-
ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க எதிர்பார்ப்பு
-
பாலாறு பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்
-
முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு மகாமக குளத்தில் மனுக்கள் வீச்சு