ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க எதிர்பார்ப்பு

செய்யூர்:ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பத்தில் கழிவெளி நீர், கடலில் கலக்கும் முகத்துவாரம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஓங்கூர் ஆறு வழியாக வெளியேறும் மழைநீர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட 45 கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் கழிவெளியில் இணைந்து ஆலம்பரைக்குப்பத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கின்றன.
கடலும் கழிவெளியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் நீர்சுழற்சி மற்றும் அதிக நீரோட்டம் இருப்பதால் இப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணியர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். அதே போல அருகே உள்ள ஆலம்பரைக்கோட்டை பகுதியில் கழிவெளியில் உள்ள பள்ளத்தில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
ஆலம்பரைக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி சுற்றுலாப்பயணியர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், முகத்துவாரம் மற்றும் கோட்டைப் பகுதியில் சுற்றுலாப்பயணியர் குளிக்க நிரந்தர தடை விதித்து, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும், எச்சிரிக்கை பலகை வைக்க வேண்டும், பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.