3 'சூப்பர் ஓவர்' அதிசயம் * நெதர்லாந்து சாதனை வெற்றி

கிளாஸ்கோ: 'டி-20' கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக மூன்றாவது 'சூப்பர் ஓவரில்' நெதர்லாந்து அணி வென்றது.
ஸ்காட்லாந்தில் முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் மோதின. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது.
பின் நேபாள அணிக்கு கேப்டன் ரோகித் பவுடல் (48), குஷால் (34) கைகொடுத்தனர். கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டன. லமிசேன், நந்தன் இணைந்து 15 ரன் மட்டும் எடுத்தனர். நேபாள அணியும் 20 ஓவரில் 152/8 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது.
மூன்று முறை
முதல் சூப்பர் ஓவரில் நேபாள அணி 19/1 ரன் எடுத்தது. நெதர்லாந்தும் 19/0 ரன் எடுக்க, மீண்டும் போட்டி 'டை' ஆனது. வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை 'சூப்பர் ஓவர்' நடத்தப்பட வேண்டும் என்ற விதி காரணமாக, போட்டி இரண்டாவது 'சூப்பர் ஓவருக்கு' சென்றது.
இம்முறை முதலில் களமிறங்கிய நெதர்லாந்து 17/1 ரன், அடுத்து நேபாளம் 17/0 ரன் எடுத்ததால், மூன்றாவது முறையாக போட்டி 'டை' ஆனது.
இதனால் மூன்றாவது முறையாக 'சூப்பர் ஓவர்' நடந்தது. இதில் முதலில் விளையாடிய நேபாள அணி, 0.4 ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டை (0/2) இழந்தது. அடுத்து வந்த நெதர்லாந்து அணிக்கு லெவிட் (6), முதல் பந்தில் சிக்சர் அடிக்க, 'திரில்' வெற்றி பெற்றது. 'டி-20' வரலாற்றில் மூன்றாவது 'சூப்பர் ஓவரில்', ஒரு அணி வெற்றி பெற்றது இதுதான் முதன் முறை.

Advertisement