ஒழுக்க நெறிகளை மீறும் பள்ளி மாணவர்கள் கண்டிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

திருவாலங்காடு:திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என, மொத்தம் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

அதில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, குறிப்பிட்ட ஒழுக்க விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு, பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்கள் அனைவரும், காலை 9:15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். 'லோ ஹிப், டைட் பிட் பேன்ட்'கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.

கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும். மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை, கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், மாணவர்கள் சிலர், இத்தகைய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. ஆசிரியர்கள் கண்டிக்க முற்பட்டாலும் கீழ் படிவதில்லை. நீளமாக தாடி மற்றும் தலைமுடி வளர்த்து, முறையாக சீருடை அணியாமல், அவ்வப்போது அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.

பெற்றோர்களை அழைத்து தகவல் தெரிவித்தால், அவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு அவசியம் தர வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்த கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement