'இதயம் கவர்ந்த' ராஷ்மிகா * சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு விருது

லண்டன்: பெண்கள் டென்னிசின் முன்னணி தொடர் 'பில்லி ஜீன் கிங்' கோப்பை. இதில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளுக்கு, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) சார்பில், 'இதயங்களை கவர்ந்தவர்' விருது வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, இவ்விருதை தட்டிச் சென்றார். கடந்த 2020ல் சானியா மிர்சா, 2022ல் அன்கிதா ரெய்னாவுக்குப் பின், 'இதயம் கவர்ந்த' மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார்.
'பில்லி ஜீன் கிங்' கோப்பை தொடரில் ஆசிய/ஓசியானா பிரிவில் இந்தியா விளையாடியது. இதில், நியூசிலாந்து, தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே, தென் கொரியா என ஐந்து அணிகளுக்கு எதிரான ஒற்றையர் போட்டியிலும் ராஷ்மிகா வெற்றி பெற்றார். இந்த வெற்றிகள் காரணமாக இந்திய அணி 'குரூப் 1' பிரிவுக்கு முன்னேறியது.
இதனால்,' சர்வதேச அரங்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன், துணிச்சலாக செயல்பட்டு, தேசத்திற்காக வெற்றி பெற்றுத் தந்தவர்,' என்பதை அங்கீகரிக்கும் வகையில் ராஷ்மிகாவுக்கு ஐ.டி.எப்., விருது வழங்கியுள்ளது.

Advertisement