சரிந்தது கோவை பேட்டிங் * டி.என்.பி.எல்., தொடரில் ஏமாற்றம்

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை அணி, 14 ரன்னில் தோல்வியடைந்தது.
சேலத்தில் டி.என்.பி.எல்., தொடரின் 2வது கட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் கோவை, திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற கோவை பீல்டிங் செய்தது.
ராஜ்குமார் அரைசதம்
திருச்சி அணிக்கு வாசீம் அகமது, சுஜாய் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 39 ரன் சேர்த்த போது வாசீம் (32) அவுட்டானார். சுஜாய் (25 ரன், 24 பந்து) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கபிலன் வீசிய 17வது ஓவரில் ராஜ்குமார் 6, 6, 4, 4, என விளாசினார். இவர், 18 பந்தில் அரைசதம் விளாசினார். திருச்சி அணி 20 ஓவரில் 168/5 ரன் மட்டும் எடுத்தது. ராஜ்குமார் (58) அவுட்டாகாமல் இருந்தார்.
ஏமாற்றிய பேட்டிங்
கோவை அணிக்கு துவக்கத்தில் ஜிதேந்திர குமார் (7), சுரேஷ் (11) ஜோடி அதிர்ச்சி கொடுத்தது. கேப்டன் ஷாருக்கான் 10 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். சித்தார்த் (39) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. கோவை அணி 20 ஓவரில் 154/9 ரன் மட்டும் எடுத்தது. இதுவரை பங்கேற்ற 4 போட்டியிலும் தோற்ற கோவை அணி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Advertisement