வீரவாஞ்சிநாதன் 114வது நினைவு தினம் * வாஞ்சி இயக்கம் மரியாதை

செங்கோட்டை:வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி அவரது சொந்த ஊரான செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு வாஞ்சி இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சுதந்திரப்போராட்ட காலத்தில் 1911 ஜூன் 17 ல் தூத்துக்குடியில் இருந்து சப்கலெக்டர் ஆஷ், ரயில் மூலம் கொடைக்கானல் பயணித்தார். ரயில் மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்றபோது வாஞ்சிநாதன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வின் 114 வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன் மாலை அணிவித்தார். அங்கு முத்துசாமி பூங்கா வளாகத்திலுள்ள மணிமண்டபத்தில் கலெக்டர் கமல்கிஷோர் வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார்.

வாஞ்சிநாதன் குடும்பத்தை சேர்ந்த ஹரிஹரசுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.எம்.ரஹீம், ஆணையாளர் புனிதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.மு.க., சார்பில் நகரச்செயலாளர் வெங்கடேசன், கடையநல்லுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி, பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

குற்றாலம் ஐந்தருவி பாரத் மாண்டிச்சோரி பள்ளி சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற வாசுதேவநல்லூர் பள்ளி மாணவி ஜெ.க.மோனிகாவுக்கு ரூ. 12,450 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Advertisement