மழையின் தீவிரம் குறைந்தும் இடுக்கியில் தொடருது சேதம்

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் சற்று குறைந்தபோதும் சேதங்கள் தொடர்கின்றன.
இம்மாவட்டத்தில் பருவ மழை ஜூன் 11 மாலையில் தீவிரமடைந்து ஒருவாரமாக கொட்டியது. நேற்று காலை கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் 1:00 மணிக்கு ' எல்லோ அலர்ட்' விடுத்தது.
நேற்று முன்தினம் காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 80.16 மி.மீ., பெய்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 65.1 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 111.7, குறைவாக உடும்பன்சோலை தாலுகாவில் 29 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் மிகவும் அதிகமாக வழக்கம் போல் மூணாறில் 100.18 மி.மீ., மழை பெய்தது. மழையின் தீவிரம் சற்று குறைந்த போதும் பல்வேறு சேதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பாதிப்பு அதிகம்
மழையால் அடிமாலியில் மண்சரிவால் பாதிப்பு அதிகமானது. இங்கு பள்ளிகுன்னு பகுதியில் தடுப்பு சுவர் கற்கள் பெயர்ந்து விழுந்து இஸ்மாயில், ஷம்லாஅனஸ் வீடுகள் சேதமடைந்தன. அதேபோல் அடிமாலி அம்பலபடியில் ஷாஜி என்பவரது வீட்டின் அருகில் இருந்த கிணறு இடிந்தது. அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே கூம்பன்பாறை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பருவமழை துவங்கிய மே 24 முதல் நேற்று முன்தினம் வரை 1041.13 எக்டேரில் விளை பொருட்கள் சேதமடைந்தன. அதன் மதிப்பு ரூ. 17.95 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஏலம், வாழை ஆகியவை கூடுதலாக சேதமடைந்தன. 9569 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.