ஓவர் லோடு லாரிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

செய்யூர்:அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான தொன்னாடு, ஓணம்பாக்கம், கொளத்துார், பெரியவெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன.
கல்குவாரிகளில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
குவாரியில் இருந்து செல்லும் லாரிகள் அரசு விதிகளை மீறி அதிகபடியான பாரங்கள் ஏற்றிச்செல்வது, பாரம் ஏற்றிச் செல்லும் போது தார்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் செல்வதால், லாரிகளை பின் தொடர்ந்து செல்லும், பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிக்கற்கள் சாலை ஓரத்தில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
புகார் தெரிவித்தால் காவல் துறையினரும் ஓவர்லோடு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். லாரி உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தி விட்டு மீண்டும் ஓவர்லோடு ஏற்றிச்செல்வது வழக்கமாக தொடர்கிறது.
மாவட்ட நிர்வாகம் மூன்று முறை ஓவர் லோடு ஏற்றிச்சென்று அபராதம் விதிக்கப்படும் லாரிகளை பறிமுதல் செய்யவும், தொடர்ந்து லாரிகளில் ஓவர் லோடு ஏற்றி விடும் கல்குவாரி மற்றும் கிரஷர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.