6 பேரை பலி வாங்கிய குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையை சேர்ந்த மேகவர்ணம் என்பவருக்கு சொந்தமான, மேகா புளூ மெட்டல்ஸ் குவாரியில் மே 20ல் பாறைக்கு வெடி வைக்க ஊழியர்கள் மணல் அள்ளும் இயந்திரத்தில் குழி தோண்டியபோது ஏற்பட்ட அதிர்வில், பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது.
காலாவதி
இதில், பாறைக்கு அடியில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார், குவாரி உரிமையாளர் மேகவர்ணம், அவரது தம்பி கமலதாசன், பொறுப்பாளர் கலையரசன் 32, சூப்பர்வைசர் ராஜ்குமார் 30, உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து, மூவரை கைது செய்தனர். மேகவர்ணத்தை தேடி வருகின்றனர்.
இக்குவாரியில் விசாரணை நடத்த கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். வருவாய் மற்றும் கனிமவளத் துறையினர் 'ட்ரோன்' வாயிலாக ஆய்வு செய்தனர்.
ஆய்வுக் குழுவினர் கலெக்டரிடம் அளித்த ஆய்வறிக்கையின்படி, 1.50 ஹெக்டேரில் குவாரி நடத்த அனுமதி பெற்று, அந்த லைசென்சை பயன்படுத்தி ஏற்கனவே, 3.60 ஹெக்டேரில் குவாரி செயல்பட லைசென்ஸ் பெற்று, 2024 செப்., 25ம் தேதியுடன் காலாவதியான குவாரியிலும் கற்களை எடுத்து அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது.
உத்தரவு
காலாவதியான இரு குவாரிகளின் லைசென்சையும் தற்காலிகமாக கலெக்டர் ஆஷா அஜித் ரத்து செய்தார்.
தொடர் விசாரணையில், ஒட்டுமொத்தமாக, 6 லட்சத்து 15,324 க.மீ., கற்களை எடுத்ததற்காக, 91 கோடியே 56,960 ரூபாய் அபராதம் விதித்து தேவகோட்டை சப்- - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.
அடுத்த, 30 நாட்களுக்குள் அபராதத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்து உள்ளனர்.