நெரிசலால் தினம் தினம் அவதி ரவுண்டானா அமைப்பதே தீர்வு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் - சத்தியவேடு மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை அமைந்துள்ளது.

இங்கு, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நகரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு, ஊத்துக்கோட்டை வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, வரதயபாளையம், சூளூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த வழியே தான் செல்ல வேண்டும்.

இங்குள்ள அண்ணாதுரை சிலை உள்ள இடத்தில் இருந்து பிரியும் சாலை வழியே செல்ல வேண்டும். நான்கு சாலை சந்திக்கும் இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், வாகனங்கள் வளைவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஊத்துக்கோட்டை நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரு/ஊத்துக்கோட்டையில் ரவுண்டானா செய்திக்கான படம்

Advertisement