அரசு தொடக்கப்பள்ளி வளாகம் அருகே இடியும் அபாய நிலையில் குடிநீர் தொட்டி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மங்காபுரம் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி வளாகத்தையொட்டி, ஊராட்சி நிர்வாகம் சார்பில், 20 ஆண்டுகளுக்கு முன், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, மங்காபுரம் கிராமத்தில் தெருக்குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்காததால், தற்போது, தொட்டியின் நான்கு துாண்கள் சேதமடைந்துள்ளன.

அதாவது, துாண்களில் கான்கிரீட் தளம் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த கம்பிகளும் துருப்பிடித்து வருவதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அதேபோல், நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகுதியிலும் கான்கிரீட் தளம் பெயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement