உதவிய பஸ் டிரைவர் உயிரிழந்த பரிதாபம்

கொட்டாம்பட்டி:நெடுஞ்சாலையில் இரவு நேரம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆம்னி பஸ் டிரைவர் அழகுராஜா, மற்றொரு ஆம்னி பஸ் மோதியதில் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்தவர் அழகுராஜா 30, ஆம்னி பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்சில் பயணிகளை ஏற்றி வந்தார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கொட்டாம்பட்டி, மணப்பட்டி அருகே முன்னால் சென்ற ஆம்னி பஸ், ஒரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதை பார்த்தார்.

அவர்களுக்கு உதவி செய்ய பஸ்சை ஓரமாக நிறுத்திச் சென்றார். விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவருக்கு தண்ணீர் கொடுத்த போது, பின்னால் வந்த வேன் டிரைவர் ஒருவரும் உதவி செய்வதற்காக தனது வேனை நிறுத்தினார். அதேநேரம் அதன் பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பஸ், வேன் மீது மோதியது. அந்த வேன் நகர்ந்து தண்ணீர் கொடுத்த டிரைவர் அழகுராஜா மீது மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., கவிதா விசாரிக்கிறார்.

Advertisement