புதிதாக கட்டிய குடியிருப்பில் குடிநீர் வசதி என்னாச்சு? அரை -கி.மீ., அலையும் பழங்குடியின மக்கள்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மேல்முருக்கம்பட்டு கிராமத்தில் இருந்து மங்காபுரம் செல்லும் சாலையில், கடந்தாண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மொத்தம் 2.65 கோடி ரூபாய் மதிப்பில், 53 வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் குடியிருப்பு பணிகள் நிறைவடைந்து, தகுதி வாய்ந்த பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர். குடியிருப்புகளுக்கு மின்வசதி, குடிநீருக்காக, 17.40 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் பொன்னேரியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்ட பழங்குடியினருக்கு வீடுகளுக்கான சாவியும் வழங்கினார். தற்போது, 53 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

ஆனால், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவில்லை. புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தும், மின்மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல், மாவட்ட பழங்குடியின துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால், பழங்குடியின மக்கள் குடிநீர் கொண்டு வருவதற்கு, அரை கி.மீ., துாரம் சென்று, விவசாய கிணற்றில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பழங்குடியின குடியிருப்புக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement