சோதனை! அடுத்தடுத்து கோளாறில் சிக்கும் 'ஏர் இந்தியா': ஒரே நாளில் 13 விமானங்களின் சேவை ரத்து

புதுடில்லி: ஆமதாபாதில் நடந்த பயங்கர விமான விபத்துக்கு பின், 'போயிங்' நிறுவனத்தின், '787 - 8 ட்ரீம்லைனர்' விமானங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில், இருவழிகளில், 13 ட்ரீம் லைனர் விமானங்களின் சேவையை, 'ஏர் இந்தியா' நிறுவனம் ரத்து செய்தது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, 242 பேருடன் சமீபத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இதில், ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் முன்பகுதி மோதியதில், பி.ஜே.மருத்துவக் கல்லுாரியின் 10க்கும் மேற்பட்ட மாணவர்களும் உயிரிழந்தனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த விபத்தைத் தொடர்ந்து, போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று, ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் உள்ளிட்டோருடன், டி.ஜி.சி.ஏ., அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, டி.ஜி.சி.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஏர் இந்தியா நிறுவனத்திடம் மொத்தம், 33 போயிங் 787 - 8/9 விமானங்கள் உள்ளன.
ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து, இவற்றில், 24 விமானங்கள் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை; தற்போதுள்ள பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தரையிறங்குதல் பிரிவுகளில் உள்ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பயணியரின் சிரமத்தை குறைக்க உதிரி பாகங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், விமானங்கள் தாமதமாவதை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இஸ்ரேல் உடனான மோதலால், வான்வழியை ஈரான் மூடி உள்ளது.
இதனால், விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகலாம்.
இது தொடர்பாக பயணியருக்கு முன்கூட்டியே விமான நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். கடைசி நேரத்தில் பயணியரை அலைக்கழிக்கக் கூடாது.
கடந்த ஐந்து நாட்களில், இரு வழிகளில், 66 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
ஆமதாபாத் விமான விபத்து நடந்த ஜூன் 12ல், 50 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா இயக்கியது. இதில், 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 13ல், 41 விமானங்கள் இயக்கப்பட்டதில், 11 ரத்தாகின.
வலியுறுத்தல்
ஜூன் 14ல், 47 விமானங்கள் இயக்கப்பட்டன; 12 ரத்து செய்யப்பட்டன. ஜூன் 15ல், 41 விமானங்கள் இயக்கப்பட்டன; 14 ரத்தாகின. ஜூன் 16ல், 39 இயக்கப்பட்டதில், 11 ரத்து செய்யப்பட்டன.
நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, இரு வழிகளில், 30 போயிங் - 787 விமானங்களை ஏர் இந்தியா இயக்கியதில், 13 ரத்து செய்யப்பட்டன.
பயணியரின் பாதுகாப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை, ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றிற்கான உறுதிப்பாட்டை டி.ஜி.சி.ஏ., மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களின் செயல்திறனையும் டி.ஜி.சி.ஏ., தொடர்ந்து கண்காணிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
-
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா
-
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு
-
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்