வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை திட்டம்: ரத்து செய்ய சத்தீஸ்கர் முடிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு ஊழியர்களுக்கு என கொண்டு வரப்பட்ட வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை திட்டத்தை ரத்து செய்ய தற்போதைய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, கடந்த 2022ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பணியிடம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையிலான இடைவெளியை குறைக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதலாக சில மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்போது ஆட்சி செய்து வரும் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக விஷ்ணுதியோ சாய் கூறியதாவது: இத்திட்டம் தொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த திட்டத்தினால், பணிகள் பாதிக்கப்படுவதுடன், நிர்வாகப் பணிகளும் மெதுவாக செயல்படுவதாக தெரிவித்தனர்.


அரசு ஊழியர்களும், இந்த இரண்டு நாட்கள் விடுமுறையால் எந்த பலனும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனால், வேலை பாதிக்கப்படுகிறது. நேரமும் வீணடிக்கப்படுகிறது என்கின்றனர். பல ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மதியமே கிளம்பிவிடுவதால் நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது என்றார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், ஐந்து நாட்கள் வேலை திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால், அதேபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசிடம் பேசி அதனை ரத்து செய்யவைப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதற்கு மாநில அரசு ஊழியர்கள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

Advertisement