மைசூரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மைசூரு: மைசூரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு நகரின் பன்னுார் சாலையில், ஞானசரோவரா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. நேற்று மதியம் இப்பள்ளிக்கு இ - மெயில் வந்தது.

அதில், 'ஆமதாபாத் பெண் பலாத்கார வழக்கில், நீதி கிடைக்கவில்லை என்றால், பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும்' என கூறப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர், உடனடியாக பள்ளி முதன்மை செயல் அதிகாரி பவன் ஷெட்டிக்கு தகவல் தெரிவித்தார். அவரும், மாவட்ட எஸ்.பி., விஷ்ணுவர்த்தனுக்கு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உடனடியாக பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்து மைசூரு தெற்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் குழுவினர், தடயவியல் நிபுணர்கள் வந்தனர்.

பள்ளி முதல்வர் அறை, வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறைகள், கழிப்பறைகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பள்ளியின் அனைத்து இடங்களில் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரம் சோதனைக்கு பின், புரளி என்பது தெரிய வந்தது.

பள்ளி முதல்வர் சுதாகர் ஷெட்டி வெளியிட்டு உள்ள அறிக்கை:

நேற்று பகல் 12:08 மணிக்கு எங்கள் பள்ளியின் இ - மெயிலுக்கு, திவிஜ் பிரபாகர் என்ற முகவரியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் உடனடியாக வந்து பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பள்ளியில் பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.

சோதனைக்கு பின் போலி மிரட்டல் என்பது தெரிய வந்தது. எனவே, பெற்றோர் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

மைசூரு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement