அரசு பஸ்சில் சீட் சண்டை இளைஞருக்கு கத்தி குத்து

பெலகாவி: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ஜன்னல் அருகில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், மாணவர் கத்தியால் குத்தப்பட்டார்.

பெலகாவி மாவட்டம், பந்தபலேகுந்த்ரி கிராமத்தில் இருந்து பெலகாவி சிட்டி பஸ் நிலையத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது.

பஸ்சில் ஜன்னல் அருகில் அமருவது தொடர்பாக, பந்தபலேகுந்த்ரி கிராமத்தை சேர்ந்த ரஷீத் சனடி, 19, என்ற மாணவருக்கும், அடையாளம் தெரியாத இரு வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பஸ்சில் இருந்த பயணியர், அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் கோபத்தில் இருந்த வாலிபரும், அவரது நண்பரும், சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

திடீரென மாணவர் ரஷீத் சனடியின் மார்பில் அவர்கள் கத்தியால் குத்தினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணியர் கூச்சலிட்டனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்து, இருவரும் தப்பிவிட்டனர்.

படுகாயமடைந்த மாணவரை, பெலகாவி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த டி.சி.பி., ரோஹன் ஜெகதீஷ், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். ''மர்ம நபர்களை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement