சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ஈரோடு, சேலம் ரவுடி ஜான் கொலையில், 1,000 பக்க குற்றப்பத்திரிகை ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த சாமிதாஸ் மகன் ஜான், 30. இவர் மனைவி சரண்யா, 28. பி.இ., எல்.எல்.பி. படித்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருப்பூர் தில்லை நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். டூவீலர், நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தினார்.
போதை பொருள் விற்ற வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். கடந்த மார்ச், 18ல் ஆல்டோ காரில் மனைவி சரண்யாவுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று, கையெழுத்து போட்டு விட்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம், நசியனுார் முள்ளம்பட்டி பிரிவு அருகே, ஜான் ஓட்டி சென்ற காரை, அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து வந்த ரெட் டாக்சி, திடீரென ஜான் காரின் பின்புறம் மோதி நின்றது. பின், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கி வந்த நால்வர், ஜானை காரிலேயே வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது. கொலை செய்து தப்பிய கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய நால்வரை சித்தோடு போலீசார் சுட்டு பிடித்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய, 14 பேரும் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் ஜாமினில் வெளியே வரவில்லை. துப்பாக்கி சூட்டில் கார்த்திகேயனின் காலை டாக்டர்கள் அகற்றினர். சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோர் குண்டாஸில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பவானி டி.எஸ்.பி., ரத்தினகுமார், நேற்று ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு தொடர்பாக, 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்
பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து டி.எஸ்.பி., ரத்தினகுமார் கூறுகையில், ''14 பேரும் சிறையில் இருக்கும் போதே வழக்கு விசாரணை நடைபெறும். வழக்கை விரைந்து முடித்து, தண்டனை பெற்று தர சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.