படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு; மழைக்கு பின் துார்வாரப்படும்

வால்பாறை : வால்பாறையில், படகு இல்லத்தை ஆய்வு செய்து, மழைக்கு பின் துார்வாரப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரியில் சுற்றுலா பயணியர் பயணம் செய்ய கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை சங்கமிக்கிறது. இதனால், கழிவுநீரில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், என, நகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், கடந்த மாதம், படகுசவாரியில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், இன்று வரை படகு இல்லத்தை சுத்தம் செய்து, மீண்டும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் படகுசவாரியில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறித்து, கடந்த வாரம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், படகுஇல்லத்தை வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ) கணேசன், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் நலன் கருதி, மழைக்கு பின் விரைவில் படகுசவாரி துார்வாரப்படும். படகு இல்லத்துக்கு செல்லும் நடைபாதையும்விரைவில் சீரமைக்கப்படும். தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்,' என்றனர்.

Advertisement