நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை

புதுடில்லி: வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து வந்த தகவலின் பேரில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்ட போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான புகார்களை யஷ்வந்த் வர்மா மறுத்தார்.
இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார். அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது.
ஆனால், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கவில்லை. அதேவேளையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், யஷ்வ்ந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையில் கூறியிருப்பதாவது; நீதிபதி யஷ்வந்த் குற்றம் புரிந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அவரது வீட்டில் பணக் கட்டுகள் இருந்ததற்கான சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் உள்ளன. மொத்தம் நீதிபதியின் மகள், தீயணைப்பு வீரர்கள், போலீஸார் என மொத்தம் 55 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளன.
"என்னுடைய வாழ்நாளில் இவ்வளவு ரூபாய் நோட்டுக்களை நான் பார்த்ததே இல்லை," என்று சாட்சியம் அளித்த ஒருவர் கூறியுள்ளார்.
நீதிபதியின் தனி செயலாளர் ஒருவர் பணம் குறித்து ஏதும் சொல்லக் கூடாது என்று தீயணைப்பு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். மேலும் விசாரணை குழு ஆய்வு செய்வதற்கு முன்பாக அவரது குடும்பத்தினரால், தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டு விட்டன. ரூபாய் நோட்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸிடமோ அல்லது தலைமை நீதிபதியிடமோ புகார் அளிக்காதது ஏன்?
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை இயற்கைக்கு மாறாக இருந்துள்ளது. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இவ்வாறு கூறியுள்ளது.











மேலும்
-
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து பிரதமர் ஷின்வத்ரா
-
7வது நாளை எட்டிய போர்: இஸ்ரேல் - ஈரானில் நடப்பது என்ன!
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம்: ஆறுதல் கூற செல்லாதது ஏன்; முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு
-
ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 25 பேர் உயிரிழப்பு