ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்

8


டெஹ்ரான்: ''ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்வதே இந்த போரின் இலக்கு,'' என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கமேனி போன்ற சர்வாதிகாரிகள், ஈரான் போன்ற நாட்டை வழிநடத்தும்போது, இஸ்ரேலை அழித்துவிடுவார்கள். அவரை இருக்க விடக்கூடாது.


இது குறித்து இஸ்ரேல் விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனது இலக்கு என்ன என்பதை அறிந்து வைத்துள்ளது. அந்த நபர் இருக்கக்கூடாது. கமேனி தனது ஏஜென்ட்கள் மூலம் இஸ்ரேலை அழித்துவிடுவார். நம்மை அழிக்க நினைக்கும் அந்த நபர் வாழக்கூடாது. அவரை தடுத்து நிறுத்துவது, கொல்வது என்பது இந்த போரின் ஒரு பகுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த வாரம் ஈரான் மீதான தாக்குதலை துவக்கிய இஸ்ரேல், ஆட்சி மாற்றமே இலக்கு எனக்கூறியிருந்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறுகையில், ராணுவ நடவடிக்கை, ஈரானியர்கள் சுதந்திரம் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும் எனக்கூறியிருந்தார்.


இதனிடையே, ஈரானின் மதத் தலைவர் கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும், ஆனால் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது.


டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கமேனி எங்கு ஒழிந்து இருக்கிறார் என்பது தெரியும். தற்போதைக்கு அவரை கொல்வதற்கான எண்ணம் இல்லை. ஆனால், அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement