கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம்: ஆறுதல் கூற செல்லாதது ஏன்; முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

1

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்? என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.

இ.பி.எஸ்., அறிக்கை:

கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை; தி.மு.க., ஆட்சியாளர்களைத் தவிர!

மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?

ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.

ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த தி.மு.க., அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement