உடல், மனரீதியாக குணமடைய வேண்டும்; மருத்துவமனையில் உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களை சொல்கிறார் அன்புமணி!

3

சேலம்: "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்" என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.



சேலம், தருமபுரியில் பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கவுரவ தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், ஆகியோர் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலம், சூரமங்கலத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.



தி.மு.க.,வுக்கு பயம்

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் 100% பொய். நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன். தி.மு.க.,விற்கு பயம் வந்துவிட்டது வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.



வலுவான கட்சி

பா.ம.க., வலுவான கட்சி. அடுத்த கட்டத்திற்கு பா.ம.க., செல்ல வேண்டும். என் வாழ்க்கையில் முதல் முதலில் கட்சிக்கொடி ஏற்றியது சேலம் மேற்கு மாவட்டத்தில் தான். நீங்கள் கொடுத்த தைரியத்தால் தான் நான் இந்த நிலையில் உள்ளேன்.


சமூக நீதி

தி.மு.க.,வினர் 530 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். 60- 70 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். ஜூலை 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.


தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நடைபயணமாக அமையும். சமூக நீதிக்கு எதிரான தி.மு.க., ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்புவோம் காலம், நேரம் வந்துவிட்டது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு பெரிய பாடம் புகட்டப்படும்.


சேலம், தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க., ஒரு இடம் கூட வெற்றி பெறக் கூடாது. இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement