ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலின் பாதுகாப்புக்கு சவால்

டெல் அவிவ்: ஈரான், பல முனைகளுடன் கூடிய ஏவுகணையை ஏவியுள்ளதாகவும், இது புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் 7 வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது பல வெடிகுண்டுகளுடன் கூடிய ஏவுகணையை வீசியது தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை யினர் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் மீது ஈரான் இன்று 20 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில், அதில் ஒன்று பல முனைகள் கொண்ட ஏவுகணை ஆகும். இதில் ஒன்று, அஜோர் பகுதியில் உள்ள குடியிருப்பு மீது விழுந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏவுகணை விழும் நேரத்தில் வெவ்வேறு பாகங்களாக பிரிந்து விடும். தொட்டால் வெடிக்கும் வகையில் அவை தயார் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த தாக்குதலில் எந்த சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு புதுவகையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என தெரியவந்துள்ளது.

போர் துவங்கியதில் இருந்து 450 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஈரான் வீசி உள்ளது எனவும், இதில் பெரும்பாலானவை தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலின் வடக்குப்பகுதியை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்துவதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement