ரூ.11 லட்சம், 16 சவரன் சுருட்டிய போலி சாமியார், பெண் கைது

மதுரை: செய்வினையை எடுக்க மாந்திரீகம் செய்வதாக கூறி நகை, பணத்தை பெண்ணிடம் சுருட்டிய போலி சாமியார், பெண் கைது செய்யப்பட்டனர்.



சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் அங்கையற்கண்ணி, 50. சில நாட்களுக்கு முன் மதுரை வழியாக திருச்செந்துாருக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது, குறி சொல்வதாக கூறி, உஷா என்பவர் அறிமுகமானார்.


சென்னை திரும்பிய அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, 'என் குருஜி சிவக்குமார் வாயிலாக செய்வினையை எடுக்கலாம்' எனக்கூறி, 11 லட்சம் ரூபாய், 16 சவரன் நகைகளை பெற்றார். இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அங்கையற்கண்ணியிடம் மகள் கேட்க, மாந்திரீகம் விபரங்களை கூறி அதற்கு கொடுத்ததாக கூறினார். அதேநேரம் அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, மேலும் 2 லட்சம் ரூபாய் பூஜைக்கு தேவைப்படுகிறது எனக்கூறினார். நேரில் தருவதாக கூறி தாயும், மகளும் மதுரை வந்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தனர். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு வந்த உஷாவை போலீசார் சுற்றிவளைத்தனர்.


விசாரணையில் உஷாவின் உண்மையான பெயர் சுடலையம்மாள் 35, எனத்தெரிந்தது. அவரது தகவலின்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் குறி சொல்லும் சிவக்குமாரை 41, போலீசார் விசாரித்தபோது, பலரிடம் மாந்திரீகம் செய்வதாக கூறி, நகை பணம் மோசடி செய்தது தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே சூடியூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு 15 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். சிவக்குமாரும், சுடலையம்மாளும் கைது செய்யப்பட்டனர்.

சிவக்குமாரின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தபோது, பலரும் பரிகாரத்திற்கு பணம் அனுப்பியது தெரிந்தது.



இவர் மீது ஏற்கனவே ஆடு திருடிய வழக்கு பார்த்திபனுார் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. தென்காசியை சேர்ந்த சுடலையம்மாள் போலியாக குறிசொல்லி வந்தவர். மாந்திரீகம் செய்ய சிவக்குமார் தென்காசிக்கு வந்தபோது அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

Advertisement