ராணுவ அமைச்சர் தலைமையில் திருச்சியில் ஜூன் 30ல் குறைதீர் கூட்டம்; முன்னாள் படை வீரர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

மதுரை : திருச்சியில் நடைபெற உள்ள முப்படை ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண 'ஸ்பார்ஷ்' குறைதீர் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது.

இதில் துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் சங்கீதா, முன்னாள் படைவீரர் நலச்சங்க துணை இயக்குனர் ஞானசேகரன், முன்னாள் படைவீரர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கலெக்டர் கூறியதாவது: திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ கிரவுண்டில் ஜூன் 30 ல் காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது.

இதில் உயிர்சான்று அடையாளம் காணுதல், ஸ்பார்ஷ் ஓய்வூதியத்தில் பெயர், இதர தகவல்களை திருத்தம் செய்தல், ஓய்வூதிய தொகை திருத்தம், ஆதார் புதுப்பித்தல், குடும்ப ஓய்வூதிய குறைகள் போன்றவற்றுக்காக தனித்தனி ஸ்டால்கள் இடம்பெறும்.

மேலும் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள், அனைத்து வங்கிகளின் அலுவலர்களுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளார். இந்த வாய்ப்பை பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் படைபணிச் சான்று அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சென்று தீர்வு காணலாம். தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி ஆகிய தகவல்களை '88073 80165' என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி முன்பதிவு செய்யலாம். அவர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றார்.

Advertisement