மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது

மதுரை : மதுரையில் இருந்து திருச்செந்துார் சென்ற பெண்ணிடம் பஸ்சில் அறிமுகமாகி செய்வினையை எடுக்க மாந்திரீகம் செய்வதாக கூறியும், புதையல் எடுத்து தருவதாக கூறியும் நகை, பணத்தை சுருட்டிய போலி சாமியார், பெண் கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் அங்கையற்கண்ணி 50. சில நாட்களுக்கு முன் மதுரை வழியாக திருச்செந்துாருக்கு அரசு பஸ்சில் சென்றார்.
அப்போது அருப்புக்கோட்டையில் ஏறிய உஷா என்பவர் அறிமுகமானார். 'எனக்கு சிறுவயதிலேயே குறி சொல்லும் சக்தி உள்ளது. உங்கள் முகத்தை பார்த்தால் யாரோ செய்வினை வைத்துள்ளது போல் தெரிகிறது' என்றுக்கூற, அங்கையற்கண்ணி தன் குடும்ப பிரச்னைகள் அனைத்தையும் கொட்டி தீர்த்துள்ளார்.
அவரது அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு பஸ்சிலேயே 'குறி' சொன்னதற்காக ரூ.201 காணிக்கையை உஷா பெற்றுக்கொண்டார்.
பூஜைக்கு ரூ.5 லட்சம்
சென்னை திரும்பிய அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, 'என் குருஜி சிவக்குமார் மானாமதுரையில் உள்ளார். அவரை சந்தித்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என்றார். 'உடனடியாக மதுரைக்கு வரமுடியாது' என்ற அங்கையற்கண்ணியிடம் 'பரவாயில்லை. பூஜைக்குரிய செலவுகளை மட்டும் ஜி பேயில் அனுப்புங்கள். உங்கள் வீட்டின் அடியில் வராஹி அம்மன் சிலை உள்ளது. அதன் மீது நீங்கள் நடப்பதால்தான் உங்களுக்கு பிரச்னை ஏற்படுவதாக குருஜி கூறினார். அந்த சிலையை எடுக்கும் பூஜைக்கு ரூ.15 லட்சம் செலவாகும்' என உஷா கூற, அங்கையற்கண்ணி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரை சந்தித்த உஷா, 'முதற்கட்டமாக உங்களிடம் உள்ள தோடு, செயினை கொடுங்கள். அதை வைத்து பூஜை செய்ய வேண்டும்' என்றுக்கூறி பெற்றார். பிறகு பூஜைக்குரிய பொருட்கள் வாங்கவும், பூஜைக்கு நகையும் தேவைப்படுகிறது என்றுக்கூறி கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை பெற்றார்.
மாட்டுத்தாவணியில் சுற்றிவளைப்பு
இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அங்கையற்கண்ணியிடம் மகள் கேட்க, மாந்திரீகம் விபரங்களை கூறி அதற்கு கொடுத்ததாக கூறினார். அதேநேரம் அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, மேலும் ரூ.2 லட்சம் பூஜைக்கு தேவைப்படுகிறது எனக்கூறினார். நேரில் தருவதாக கூறி தாயும், மகளும் மதுரை வந்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அறிவுரைபடி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு உஷாவை அங்கையற்கண்ணி வரவழைத்தார். அவரிடம் இருந்து உஷா பணம் பெற்ற போது இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ.,தியாகப்ரியன் மற்றும் போலீசார் சுற்றிவளைத்தனர்.
நகை, பணம் மீட்பு
விசாரணையில் உஷாவின் உண்மையான பெயர் சுடலையம்மாள் 35, எனத்தெரிந்தது. அவரது தகவலின்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் குறி சொல்லும் சிவக்குமாரை 41, போலீசார் விசாரித்தபோது, பலரிடம் மாந்திரீகம் செய்வதாக கூறி, நகை பணம் மோசடி செய்தது தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே சூடியூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு 15 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை போலீசார் மீட்டனர். சிவக்குமாரும், சுடலையம்மாளும் கைது செய்யப்பட்டனர்.
எதை சொன்னாலும் நம்பிய அங்கையற்கண்ணியிடம் 'எங்கள் குருஜி, ஒரு வீட்டில் பூமிக்குள் இருந்து சிலையை எடுக்க பூஜை செய்தபோது புதையல் கிடைத்தது. அதன் மதிப்பு ரூ.35 கோடி. இன்று அந்த வீட்டில் உள்ளவர்கள் நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள். அதுபோல் உங்கள் வீட்டிலும் இருக்க வாய்ப்புள்ளது' என சுடலையம்மாள் ஆசை வார்த்தை கூறி சிவக்குமார் அறிவுரைபடி பணத்தையும், நகையையும் கறந்துள்ளார்.
மேலும்
-
டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை
-
8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்