மேம்பாலம் மேலே இறக்கிவிடும் பஸ்கள் செங்கல்பட்டில் பயணியர் தவிப்பு

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழே வந்து பயணியரை இறக்கிவிடாமல், மேம்பாலம் மேலேயே இறக்கிவிட்டுச் செல்வதால், பயணியர் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு, ஆன்மிக வழிபாட்டிற்கு வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழே, விழுப்புரம் கோட்ட நேரக் காப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பேருந்துகள் அங்கு நின்று செல்ல உத்தரவிடப்பட்டது.
இங்கு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து நடத்துநர்கள், பேருந்தை நிறுத்தி கையொப்பமிட்டுச் செல்கின்றனர்.
ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பெரும்பாலான பேருந்துகள், புறவழிச்சாலை பாலத்தின் கீழே செல்லாமல், பயணியரை பாலத்தின் மீதே இறக்கி விட்டு, பாலத்தின் மீது சென்று விடுகின்றன.
இதனால் முதியவர்கள், பெண்கள் என பலரும், பாலத்தில் இருந்து நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
பேருந்து பயணியர் கூறியதாவது:அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயணியரை தனியாக இறக்கி விட்டுச் செல்வதால், ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மின் விளக்குகள் கூட எரியாமல் இருள் சூழ்ந்துள்ள இந்த பகுதியில், பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அடிக்கடி வழிப்பறியும் இப்பகுதியில் நடக்கிறது. எனவே, அனைத்து பேருந்துகளையும் பாலத்தின் கீழே நின்று செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். மேலும், பாலத்தின் கீழே பேருந்து நிழற்குடை அமைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் உறுதி
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
-
ஆர்ப்பரித்த அதிரப்பள்ளி அருவி தொலைவில் இருந்து ரசிக்கலாம்
-
முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்
-
சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்