முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்

25

மதுரை: மதுரையில் ஜூன் 22 நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:



ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. இதில் ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி யாகமும், 1008 நாட்டு மாடுகள், 108 குதிரைகள் வைத்து பூஜையும் நடத்தப்பட்டது.



முருக பக்தர்கள் ஒருங்கிணைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2023ல் நடக்க வேண்டிய மாநாட்டிற்கான பணிகள் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும். திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரத்தையடுத்து முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'முருக பக்தர்கள் மாநாடு'எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது.

திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அடுத்து 3 நாட்கள் மட்டும் உள்ளதால் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்களுக்கு அறுபடை வீடுகளின் பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கு உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதால், பாதாம், முந்திரி, வேர்கடலை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் ஜூன் 22 மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும்.

கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் பாட தொடங்கியதும், திரையில் வரிகள் காட்சிப்படுத்தப்படும்.

இந்நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் வீடுகளில் இருந்து சரியாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடலாம்.

முன்பதிவு அவசியம்



மாநாட்டிற்கு வருவோர் முன்னதாக பதிவு செய்ய சமூக வலைதளங்களில் 'க்யூஆர்' குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இது ஹிந்து முன்னணி சார்பில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.தனது சொந்த வாகனத்தில் வருவோர் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனால், மாநாட்டுக்கு வரும் பக்தர்கள் தனது மாவட்டத்தில் பதிவு செய்து வர வேண்டும். அப்போது தான் மதுரைக்குள் போலீசார் அனுமதிப்பர் என்றார்.

Advertisement