பிரிட்டன் போர் விமானம் விற்பனைக்கு ஓ.எல்.எக்ஸ்., தளத்தில் கிண்டல் பதிவு

1

சென்னை : எரிபொருள் தேவைக்காக, திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானத்தை படம் பிடித்து, 'விற்பனைக்கு தயார்' என, ஓ.எல்.எக்ஸ்., தளத்தில் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து, 'எப்-35' ரக போர் விமானம், கடந்த 15ம் தேதி புறப்பட்டு, அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்துள்ளது.



இதனால், மீண்டும் போர் கப்பல் தளத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த விமானி, அருகில் உள்ள விமான நிலையத்தை தேடினார்.


திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில் இருப்பதை அறிந்து, மத்திய அரசு அனுமதியுடன் விமானம் அங்கு தரையிறங்கியது. பின், எரிபொருள் நிரப்பி மீண்டும் புறப்பட்டது.


இந்த போர் விமானம், திருவனந்தபுரம் ஓடுபாதையில் தரையிறங்கிய போது, சிலர் படம் பிடித்துஉள்ளனர்.


அந்த படங்களுடன், 'எப் - 35 போர் விமானம் விற்பனைக்கு' என்று குறிப்பிட்டு, ஓ.எல்.எக்ஸ்., இணையதளத்தில், கிண்டலாக பதிவு வெளியிட்டுள்ளனர்.


பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கென உள்ள தளம் இது. அந்த பதிவை வெளியிட்டவர், தன் பெயர் டொனால்டு ட்ரம்பன் எனவும், விமானத்தின் ஆரம்ப விலை, 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement