8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

19


சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து 70 பயணிகளுடன் மதுரைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், பயணிகள் 241 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்தில் தொடர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரே நபர் மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார். இந்த சூழலில், பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 4 சர்வதேச மற்றும் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

1. துபாயிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானம் (AI906)



2. டில்லியிலிருந்து மெல்போர்னுக்கு செல்லும் விமானம் ( AI308)


3. மெல்போர்னிலிருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI309)


4. துபாயிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் விமானம் (AI2204)


5.புனேவில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI874)


6. ஆமதாபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI456)


7. ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் (AI2872)


8.சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் (AI571) ஆகிய 8 விமானங்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களது ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவசர தரையிறக்கம்



சென்னையில் இருந்து 70 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்தார்.



தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானி எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisement