9 நாளாக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு டாக்டர்கள் 7 பேர் கைது

3


சென்னை : காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரி பாதயாத்திரையில் ஈடுபட்ட ஏழு அரசு டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கொரோனாவில் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி, தமிழ்நாடு அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழுவினர், சேலம் மேட்டூரில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, 11ம் தேதி பாதயாத்திரையை துவங்கினர். இதில், ஏழு டாக்டர்கள் பங்கேற்றனர். ஒன்பதாவது நாளான நேற்று, சென்னை வந்த டாக்டர்கள் குழுவினர், தேனாம்பேட்டையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


'இதற்கு மேல் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாது' எனக்கூறி, அவர்களை கைது செய்து, சமூகநலக் கூடத்தில் அடைத்தனர்.



இதுகுறித்து, அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354ஐ அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து போராடி வருகிறோம். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்' என்றார்.ஆனால், நான்காண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. கொரோனா போன்ற பேரிடர் சூழல் உட்பட பல நெருக்கடி நேரங்களில் பணியாற்றி, பல உயிர்களை காத்துள்ளோம். எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement