கூடலுாரில் மலர்ந்தநிஷாகந்தி பூக்கள்

கூடலுார் : கூடலுாரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி பூக்கள் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது.

'பிரம்ம கமலம்' என, அழைக்கப்படும் நிஷாகந்தி பூக்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் முதல் ஆக., மாதங்களில், இரவில் மலர்ந்து, சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும். இதனை கூடலுார் பகுதியில் வீடுகளில் பலர் வளர்த்து வருகின்றனர். தற்போது, இந்த செடிகளில், நள்ளிரவில் பூக்கும் பூக்களும், அதிலிருந்து வீசும் தெய்வீக நறுமணமும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், கூடலுாரில் சித்துராஜ் என்பவர் வீட்டில் இரவில் மலர்ந்த பூக்களை பலரும் வணங்கி சென்றனர்.

மக்கள் கூறுகையில், 'நள்ளிரவில் பூக்கும் இந்த செடியிலிருந்து வரும் வாசனை சந்தனமும், பன்னீரும் கலந்த தெய்வீக மணம் போன்று இருக்கும். இதனை வீட்டில் வளர்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்தப் பூக்களை வேண்டி வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றனர்.

தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'கள்ளிச்செடி இனத்தில் இந்த தாவரமும் ஒன்று. இவை அழியும் பட்டியலில் உள்ளதால், இதனை மக்கள் வீடுகளில் வளர்த்து பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement