தங்காடு கிராமத்தில்ரூ.38 லட்சத்தில் நல உதவி

ஊட்டி: தங்காடு கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு , 38 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஊட்டி அருகே தங்காடு கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது:

மாநில அரசு உத்தரவுபடி அனைத்து அரசு துறை அலுவலர்கள் நேரடியாக கிராமப் பகுதிகளுக்கு சென்று மக்கள் தொடர்பு முகாம் வாயிலாக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தான் மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்

தொடர்ந்து முகாமில், சமூக நலத்துறை சார்பில், 'முதல்வரின், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வைப்பு பத்திரம்; தோட்டக்கலை துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு, 56 ஆயிரம் ரூபாயில் தெளிப்பு நீர் பாசன கருவிகள்,' வழங்கப்பட்டன.

மேலும், வேளாண் பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ், 62 பயனாளிகளுக்கு, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், தோட்ட கலைத்துறை துணை இயக்குனர் நவநீதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement