பள்ளி பகுதிகளில் எச்சரிக்கை பலகை நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

உடுமலை : மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க, மடத்துக்குளம் உட்கோட்டம் சார்பில், எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோடுகளில், விபத்துகளை தவிர்க்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில், குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைத்தனர். தற்போது, வேகத்தடை, சாலை சந்திப்பு, பள்ளி பகுதி, அதிக விபத்து பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு எச்சரிக்கை மற்றும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த பலகைகள், இரவிலும் தெரியும் வகையில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது எலையமுத்துார், மைவாடி ரோட்டில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணி, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினரால், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, மாநில நெடுஞ்சாலையில், இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒத்திவைப்பு



உடுமலை-குமரலிங்கம் ரோட்டில், 14/4 கி.மீ., ல் இருந்து, 18/8 கி.மீ., வரை ஆக்கிரமிப்புகளை, 20ம் தேதி அகற்ற நெடுஞ்சாலைத்துறையால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இப்பணி, வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக, தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement