அமராவதி கால்வாய் உடைப்பு; சீரமைப்பு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

உடுமலை : பிரதான கால்வாய் உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதால், புதிய ஆயக்கட்டுக்கு, அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயில், 15 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆயக்கட்டு பகுதியில், நெல், கரும்பு, தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது.

தொடர் மழையால், அமராவதி அணை நிரம்பிய நிலையில், உபரி நீர் வீணாவதை தடுக்க பிரதான கால்வாய் வழியாக கடந்த, 16ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், 17 ம் தேதி, செல்வபுரம் அருகே பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஆயக்கட்டு பகுதியில், போதிய மழை இல்லாத நிலையில், அணையிலிருந்து கிடைத்த தண்ணீரும், கால்வாய் உடைப்பால் தடைபட்டதால், விவசாயிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில், கால்வாய் உடைப்பு பொதுப்பணித்துறையினரால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதியிலுள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் பொருட்டு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், 'பிரதான கால்வாயில், 20ம் தேதியிலிருந்து ஜூலை 5ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, அமராவதி அணையின் பிரதான கால்வாய் மதகு வழியாக, வினாடிக்கு, 440 கன அடி தண்ணீர் திறக்கப்படும். மொத்தம், 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு காலத்தில், கால்வாய் உடைப்பு ஏற்படாமல், முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement