வீடு கட்டுவதில் தேவையில்லாத பிரச்னைகளை தடுப்பது எப்படி?

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான வரைபட தயாரிப்பு போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.


பொதுவாக வீடு கட்டுவதற்கான பணிகளில் என்னென்ன காரணங்களால் பிரச்னை ஏற்படும் என்பதில் யாருக்கும் சரியான புரிதல் இல்லை. கட்டுமான பணியில் குறிப்பிட்ட சில விஷயங்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடியும்.


இதன்படி, கட்டுமான பணியின் போது, செங்கல், மணல், சிமென்ட், ஜல்லி விலை உயர்வது, தட்டுப்பாடு ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்ற எண்ணம் இருக்கும்.கட்டுமான பணியில் பரவலாக இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.

இது போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் எதிர்பார்த்தபடி ஏற்படும் பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்படும்.



கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை கட்டுமான ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் சமாளிக்கலாம். ஆனால், எதிர்பாராத வகையில் திடீரென ஏற்படும் பிரச்னைகள் தான் உங்களை நிலைகுலைய செய்துவிடும்.


குறிப்பாக ஒப்பந்ததாரர் தரப்பில்பணியாளர் பற்றாக்குறை, அவரது நிறுவனம் தொடர்பாக தவறான நபர்களுடன் பிரச்னை ஏற்படுவது போன்ற காரணங்களால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இது போன்ற சூழலில், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.


இதை போன்று, உங்கள் நிலத்தில் கட்டுமான பணிளை துவங்கி இருக்கும் நிலையில், அந்த பகுதியில் சாலை அமைப்பது, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசின் பல்வேறு துறைகள் துவங்கலாம். இத்தகைய பணிகளை துவக்கினால், கட்டுமான பணிகளை சில மாதங்கள் வரை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.


கட்டுமான பணிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் போடும் நிலையில், எதிர்பாராத காரணங்களால் பணிகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். எதிர்பாராத பிரச்னைகளை எதிர்பார்த்து செயல்படும் போது ஓரளவுக்கு தைரியம் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement