காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக ஆக்கி விட்டனர்: பிரதமர் மோடி

3

சிவான்: காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் சேர்ந்து கொள்ளையடித்து, கடந்த பல ஆண்டுகளாக பீஹாரை வறுமை மிக்க மாநிலமாக மாற்றியிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பீஹார், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறார். முதற்கட்டமாக பீஹார் மாநிலம் சிவானுக்கு சென்ற பிரதமர் மோடி, திறந்தவெளி ஜீப்பில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாருடன் ரோடு ஷோ நடத்தினார். அவர்களுக்கு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.



அதன்பிறகு, கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, மர்ஹோவ்ரா தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரயில் இன்ஜினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மேக் இன் இந்தியா திட்டத்தின் உற்பத்திக்கு மிகப்பெரிய மைல்கல்லாகும்.


தொடர்ந்து, ரூ.400 கோடி மதிப்பிலான நியூ வைஷாலி - தியோரியா ரயில் பாதையையும், முசாபர்பூர் - கோரக்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். மின்சாரத்துறையில் 500 மெகாவாட் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.


மேலும், ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், ரூ.3,000 கோடி மதிப்புள்ள நீர் வழங்கல் , சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல, பி.எம்.ஏ.ஒய்., நகர்ப்புற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளையும் ஒப்படைத்தார்.


பின்னர், அவர் பேசியதாவது: சுதந்திர போராட்டத்திற்கு பல தைரியமான வீரர்களை கொடுத்த மண் தான் பீஹார். இன்று உலக அளவில் இந்தியா உயர்ந்து நிற்கும் வேளையில், பீஹார் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது.


மகான்களான ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ்கிஷோர் பிரசாத் போன்றோரின் வாழ்க்கைப் பணியை என்.டி.ஏ., கூட்டணி அரசு தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை இன்று துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளோம்.


காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் சேர்ந்து கொள்ளையடித்து, கடந்த பல ஆண்டுகளாக பீஹாரை வறுமை மிக்க மாநிலமாகவும், இங்குள்ள மக்களை புலம்பெயர் தொழிலாளிகளாகவும் மாற்றி விட்டனர். பீஹார் மக்கள் காட்டு ஆட்சியை முறியடித்து விட்டனர். இன்று, என்.டி.ஏ., அரசு வளர்ச்சியை வெளிப்படைத்தன்மையோடும், பொறுப்புடனும் வழங்கி வருகிறது.


மற்றவர்களை போல ஏதோ கொஞ்சம் வேலை செய்து விட்டு, அமைதியாக இருப்பவன் அல்ல. பீஹார் மக்களுக்காக இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கடமையாகும். தே.ஜ., கூட்டணி அரசு மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. நான் வெளிநாட்டில் இருந்து நேற்று தான் இந்தியா திரும்பினேன். இந்திய பயணத்தின் போது உலக நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

வளர்ச்சி திட்டங்கள்




இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு பீஹார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் விரைவான வளர்ச்சியால் உலக தலைவர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பீஹார் மாநிலத்தில் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். நாங்கம் பீஹார் மாநிலத்திற்கு நிறைய செய்து இருக்கிறோம். இன்னும் நிறைய செய்ய உள்ளோம். பீஹார் மாநிலம் செழிக்கும்.

பெரும் பங்கு




மேலும் நாட்டின் செழிப்பிலும் பெரும் பங்கு வகிக்கும். கடந்த 11 ஆண்டுகளாக, ஏழைகளின் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும், அகற்ற எங்கள் அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அது தொடரும். இவ்வளவு கடினமாக உழைத்த பிறகு, இன்று நல்ல பலன்களைப் பார்க்கிறோம். நாட்டின் வறுமைக்கு காங்கிரஸ் தான் காரணம், காங்கிரஸ் குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியபோது, மக்கள் ஏழைகளாவே இருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement