பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

11


சென்னை: பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்தோ, அனுமதியோ பெண்கள் பெற தேவையில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாஸ்போர்ட் கோரி மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் செய்ததாகவும், நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரித்த போது கணவர் கையெழுத்து பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்ததாகவும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்த வழக்கு நடப்பதால் கணவர் கையெழுத்தை வலியுறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.


இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ' பாஸ்போர்ட் பெற கணவர் அனுமதி, கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை. கையெழுத்து வாங்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் பெண்களை கணவனின் உடமையாக கருதும் சமூகத்தின் மனப்பான்மையை அதிகாரி பிரதிபலிக்கிறார். கணவருடன் பிரச்னை உள்ள நிலையில் கையெழுத்து பெறுவது இயலாது. திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை.

கணவனின் அனுமதி, கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்க முறையை காட்டுகிறது. மனுதாரரின் கோரிக்கையை நான்குவாரத்தில் பரிசீலனை செய்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

Advertisement