திண்டுக்கல்லில் பாஜ, மார்க்சிஸ்ட் மோதல்; நிர்வாகிகள் பலத்த காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையே தாடிக்கொம்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது. இதில், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியில் மத்திய, மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பிரசார இயக்கம் நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார் என்பவர் பா.ஜ., அரசை கண்டித்தும், முருக பக்தர் மாநாடு குறித்தும், இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சொல்லி பேசியதாக கூறப்படுகிறது.


இதனையறிந்து அங்கு வந்த இந்து முன்னணியினர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.


கைகலப்பில் மார்க்சிஸ்ட் கட்சியை சரத்குமார் மற்றும்இந்து முன்னணியை சேர்ந்த வினோத் என்பவரும் காயமடைந்தனர். அவர்கள்திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து இந்து முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.


மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வினோத்தை பார்க்க இந்து முன்னணி, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் ஒன்று திரண்டனர். அதேபோல், சரத்குமாரை பார்க்க கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்று கூடினர். மருத்துவமனை முன்பும் இருதரப்பினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர்.


இரு தரப்பினரையும் போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, அவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கும் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,கைகலப்பு ஏற்பட்டது. இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர்பாலமுருகன் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


இதனையடுத்து எஸ்.பி., மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களையும், இந்து அமைப்புகளை சேர்ந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இந்தப் பிரச்னை காரணமாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


திண்டுக்கல்லில் நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு மாநில இந்து முன்னணி செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement