ஈரான் - இஸ்ரேல் போரில் டிரம்ப் 2 வார காத்திருப்பின் அர்த்தம்; வெளியான புதிய பின்னணி

வாஷிங்டன்: ஈரான், இஸ்ரேல் இடையேயான போரில் தலையிட 2 வாரங்கள் அவகாசம் எடுத்துள்ள டிரம்ப் முடிவின் பின்னணியில் உள்ள விஷயங்கள் பற்றி புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் இன்னமும் முடிவுக்கு வராமல் உள்ளது. நாட்கள் நகர, நகர மோதல் முன்பை விட வலுவாகும் என்றே தோன்றுகிறது.
போரை நிறுத்துவதில் அமெரிக்காவின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த தருணத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வாரங்கள் வரை காத்திருப்பார் என்று வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இரண்டு வாரங்கள் என்ற டிரம்பின் முடிவின் பின்னணியில் பல்வேறு திட்டங்கள் அல்லது ராஜதந்திர நடவடிக்கைகள் இருக்கலாம் என்று சர்வதேச நாடுகளின் அரசியல் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களின் கருத்தாக உள்ளது. அரசியல் மற்றும் வரலாற்று ரீதியாக கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை அவர்கள் உதாரணமாக கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறுவதாவது;
நேட்டோ ராணுவம் கடாபிக்கு எதிராக அனுப்பப்பட்டு, அவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா குண்டுவீசி கொல்லப்பட்டார். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்தது.
எனவே 2 வாரம் அமைதி அல்லது அவகாசம் என்று பெயரளவில் அறிவித்துவிட்டு, எந்நேரத்திலும் திடீரென அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
அமெரிக்காவின் தலையீடு எப்போது என்ற கேள்விகள் உலக நாடுகள் மத்தியில் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதே வேளையில், இரண்டு வாரங்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பிரபல நாளிதழ் ஹாரேட்ஸில் (Haaretz) கட்டுரைகள் எழுதும் கிடியேன் லெவி கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
நெதன்யாகுவும், அவருடன் இருப்பவர்களும் அமெரிக்காவின் இந்த பின்வாங்கலால் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். டிரம்ப் சொல்லும் இரண்டு வாரங்கள் என்பது தற்போதைய யதார்த்தத்தில் முடிவில்லாதது.
இரண்டு வாரங்கள் என்று அவர் சொல்வது ஏமாற்று வேலை. அது உண்மை என்றால் அமெரிக்கர்கள் இந்த போரில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன எனலாம்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் சேதப்படுத்துவதில் வெற்றி கண்டாலும், இஸ்ரேல் நாட்டினர் பாதுகாப்பாக உணர மாட்டார்கள். காரணம், ஈரான் இழந்த தனது திறனை மீண்டும் பெற்றுவிடும். காசா போன்ற பல பாதுகாப்பு பிரச்னைகள் இஸ்ரேலுக்கு தீரப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
7ம் நாளாக இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்; காரணம் இதுதான்!
-
டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்
-
இந்திய மாணவர்களுக்கு ஈரான் ஸ்பெஷல் அனுமதி: 1000 பேர் வெளியேற வான்வெளி திறப்பு
-
பெண்கள் பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்
-
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு
-
திண்டுக்கல்லில் பாஜ, மார்க்சிஸ்ட் மோதல்; நிர்வாகிகள் பலத்த காயம்