இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டம்: தாக்குதலுக்கான காரணம் குறித்து தூதர் விளக்கம்

2


புதுடில்லி: '' இஸ்ரேலை அழிப்பது என ஈரான் ஆட்சியாளர்கள் உறுதிபூண்டனர்'', என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கூறியுள்ளார்.


இஸ்ரேல் மற்றும் ஈரான் மீதான போர் 8 வது நாளை தாண்டி உள்ளது.


இந்த போருக்கான காரணம் குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கூறியதாவது: இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஈரான் செயல்படுகிறது. அதனை முறியடிக்க எங்கள் முன் உள்ள கடைசி வாய்ப்பாக அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரேலை அழிக்க ஈரான் ஒரு உத்தியை உருவாக்கி உள்ளது. இதனை நம்புவதற்கு சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. இதற்காக அவர்கள் மூன்று வழி திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.


அதில், முதலாவதாக அணுசக்தி என்ற ஆபத்தான பாதையை தேர்வு செய்துள்ளனர். இஸ்ரேலை அழிப்போம் என ஈரான் ஆட்சியாளர்கள் உறுதிபூண்டுள்ளனர். இதனை பல முறை சொல்லி உள்ளனர். பேரழிவை ஏற்படுத்தும் பல ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளனர். பல ஆண்டுகளாக சர்வதேச அணுசக்தி முகமையை ஏமாற்றி வருகின்றனர். அறிவிக்கப்படாத அணு ஆயுத சோதனைகளை ஈரான் நடத்தி உள்ளது. ஆனால், அது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை.


இரண்டாவதாக, 'பாலிஸ்டிக்' ஏவுகணை என்ற பாதையை அவர்கள் வைத்துள்ளனர். இதனை பல ஆண்டுகளாக நாங்கள் சொல்லி வருகிறோம். ஆனால், யாரும் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை தயாரித்து சேமித்து வைத்துள்ளது. ஆறு ஆண்டுகளில் 20 ஆயிரம் 'பாலிஸ்டிக்' ஏவுகணைகளை ஏவும் அளவுக்கு அவர்கள் திறன்பெற்றுள்ளனர். இதனை வைத்து எங்களை ஈரான் அழித்துவிடும் என்பதால், இந்த இரண்டு திட்டங்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.


கடந்த 20 மாதங்களில் இந்த பகுதியில் ஈரான் கட்டமைத்த ஆறு ராணுவங்களை நாங்கள் அழித்துள்ளோம். பல ஆண்டுகளாக எங்கள் மீது ஈரானியர்கள் மறைமுகமாக தாக்குதல் நடத்தினர். தண்டனையின்றி இதனை செய்து வந்தனர். இந்தப்படைகள் அவர்களை பாதுகாத்தன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement