7ம் நாளாக இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்; காரணம் இதுதான்!

புதுடில்லி: ''திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்-35 போர் விமானத்தில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய நிபுணர்கள் குழுவினர் வர உள்ளனர், '' என மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்ட 'எப் -35' ரக போர் விமானம், கடந்த 14ம் தேதி அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. கடற்கொள்ளையர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டும், இந்த கண்காணிப்பு பணியை பிரிட்டீஷ் கடற்படை செய்து வருகிறது.
இதற்கென கிளம்பிய போர் விமானம், நீண்ட நேரம் கண்காணிப்பு பணியில் இருந்த காரணத்தால் எரிபொருள் வெகுவாக குறைந்து விட்டது. இருக்கும் எரிபொருளை கொண்டு, மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த விமானி அருகில் உள்ள விமான நிலையத்தை தேடினார்.
திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில்இருப்பதை உணர்ந்து மத்திய அரசு அனுமதியுடன் விமானம் அங்கு தரையிறங்கியது. பிரிட்டீஷ் கடற்படை வேண்டுகோள்படி அந்த விமானத்துக்கு எரிபொருளும் வழங்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிய நிலையில், அந்த விமானத்தை விமானி கிளப்பினார். கிளப்பிய உடனே, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
உடனடியாக விமானம் பறக்கும் முடிவை கைவிட்டு, பிரிட்டீஷ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பராமரிப்பு குழுவினர் வந்து பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை சரி செய்ய முடியவில்லை.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறும் போது,' 'பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப் - 35 போர் விமானத்திற்கு, எரிபொருள் மீண்டும் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஆனால், அந்த போர் விமானம் மீண்டும் கிளம்பி சென்ற போது, 'ஹைட்ராலிக் பெயிலியர்' ஏற்பட்டதால், அது மீண்டும் கிளம்பி செல்லமுடியவில்லை.
அந்த நாட்டு பராமரிப்பு குழு வந்து பிரச்னை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. போர் விமானத்தில் உள்ள பிரச்னையை சரி செய்ய நிபுணர் குழுவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால், இந்த போர் விமானம், ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் கொண்டு செல்லப்படும், ' என்றனர்.
@block_P@இந்த பிரச்னையால், விமானம் ஏழு நாட்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த விமானத்தில், அதிநவீன தொழில்நுட்பங்கள், நவீன ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கும் வசதிகள் உள்ளன. இதன் சர்வதேச மதிப்பு 640 கோடி ரூபாய். இதன் முக்கியத்துவம் கருதி, விமானத்துக்கு, 24 மணி நேரமும் விமானத்துக்கு, சி.ஐ.எஸ்.எப்., படையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.block_P


