தொலைபேசி உரையாடல் கசிவு தாய்லாந்து பிரதமருக்கு சிக்கல்

பாங்காக்,தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவர், தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள்.

தாய்லாந்துக்கும் அதன் அண்டை நாடான கம்போடியாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது.

எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே மே 28ல் மோதல் ஏற்பட்டது. இதில், கம்போடியோ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபை தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடல்கள் கசிந்தன.

அதில் பிரதமர் ஷினவத்ரா, தாய்லாந்து ராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த தகவல் கசிந்தபின் முழு உரையாடலையும் ஹுன் சென் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது, தாய்லாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

'வெளிநாட்டிடம் நம் நாட்டு ராணுவத்தின் கண்ணியத்தை விட்டுக்கொடுத்துவிட்டார்' என்று கூறி பும்ஜைதாய் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. இக்கட்சிக்கு பார்லிமென்ட்டில் 69 எம்.பி.,க்களின் பலம் உள்ளது. இந்த விலகலால் பிரதமர் ஷினவத்ரா அரசுக்கு நுாலிழையிலான பெரும்பான்மையே உள்ளது.

Advertisement