'நெல் கொள்முதலில் ரூ.811 கோடி முறைகேடு: முதல்வர் பதில் என்ன?'

சென்னை: 'நெல் கொள்முதலில், 811 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில், அதில் முதல்வருக்கு தொடர்புள்ளதா என விவசாயிகள் கேட்கின்றனர். இதற்கு முதல்வரின் பதில் என்ன' என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற, இறக்க, எடை போட்டு கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என, அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது.


விவசாயிகளிடம், 811 கோடி ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்து விட்டு, அந்தப் பணத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தராமல், மூன்று மாதங்களுக்கும் மேலாக, தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.



மத்திய பா.ஜ., அரசை வெளியில் எதிர்ப்பதுபோல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க., அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற நிறுவனத்துக்கு, நெல்லை கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே, இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்பதும், தற்போது அம்பலமாகி உள்ளது.


இந்தத் தகவல் வெளியானபோதே டெல்டா மாவட்ட விவசாயிகள், 'இது தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், லாரி ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய தனியார் கூட்டமைப்பு' என்றனர். அவர்களிடம் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லை.

'அப்படிப்பட்ட அமைப்புக்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதால், நெல் கொள்முதல் என்பது நாளடைவில் முழுக்க முழுக்க தனியார்மயமாகி விடும்; நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்காது. விற்பனை செய்த நெல்லுக்குரிய பணமும் கிடைக்காது' என, எச்சரித்துப் போராட்டங்களில் இறங்கினர்.


அதோடு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை, தமிழக அரசு நாளடைவில் இழந்து விடும் என்றும் எச்சரித்தனர்.



அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்திய தி.மு.க., அரசு. டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதி வழங்கியது.


விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எச்சரித்ததைப் போலவே, எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழகத்தில் தனியார் ஏஜன்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.


நெல் கொள்முதலில் நடந்த, 811 கோடி ரூபாய் ஊழலில் முதல்வருக்கு தொடர்பு இருக்கிறதா என, விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முதல்வரின் பதில் என்ன; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் திடீரென பணியிட மாற்றம் செய்தது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement