குடிசையில் வசிக்கும் 'மாஜி' பஞ்., தலைவர்; அரசு வீடு ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

அரியலுார்:அரியலுார் மாவட்டம், தலையாரி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜா, 76; கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, நான்கு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர், கடந்த தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிட்டார்.


கடுகூர், தலையாரி குடிக்காடு, அயன்ஆத்துார், கோப்பி லியன் குடிகாடு, கடுகூர் பொய்யூர், பூமுடையான்பட்டி, நுரையூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களை உள்ளடக்கிய கடுகூர் ஊராட்சியில், 828 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவரானார்.



ஊராட்சியில் பல திட்டங்களை செயல்படுத்திய தர்மராஜா, பதவிக்காலம் முடிந்ததால், தற்போது ஆடு மேய்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மண் சுவர்களுக்கு, மரத்தால் முட்டுக்கொடுத்து, கூரை வேய்ந்த வீட்டில் வசிக்கிறார்.



பதவிக்காலத்தில், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் மானிய திட்டங்களில், 100 வீடுகளுக்கு மேல் கட்டிக்கொடுத்த முன்னாள் ஊராட்சி தலைவர், தனக்கு ஒரு சொந்த வீடு கூட கட்டுவதற்கு வசதி இன்றி தவித்து வருகிறார்.



தர்மராஜாவிடம் கேட்ட போது, “ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால், அரசு மானிய திட்டத்தில் தொகுப்பு வீடு வழங்க முடியாது என, அதிகாரிகள் கூறி விட்டனர். பதவி முடிந்த பின், வீடு கட்டுவதற்கு ஆரம்பகட்ட நிதி கூட இல்லை,” என்றார்.



ஓராண்டு ஊராட்சி தலைவர் பதவி கிடைத்தாலே, ஸ்கார்பியோ காரில் 'பந்தா' காட்டும் பலர் மத்தியில், தன் ஐந்தாண்டு பதவி காலத்தில் மக்களுக்காக உதவி செய்தவருக்கு அரசு தொகுப்பு வீடு ஒதுக்க வேண்டும் என, கடுகூர் ஊராட்சி பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement