பீஹாரில் விரைவில் வருது சட்டசபை தேர்தல்; முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.400ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிப்பு

2

பாட்னா: பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ரூ.400ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.



பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கிறது.

தேர்தலில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை ரூ.400ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

இது குறித்து நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் 400 ரூபாய், ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் அதிகரித்த ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் தொகை மாதத்தின் 10ம் தேதி அனைத்து பயனாளிகளின் கணக்கிற்கும் அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும். இது 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு பெரிதும் உதவும். இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Advertisement